பாரதியார் கவிதைகள்:- பாரதியார் இயற்றிய கவிதைகளில் இடம்பெற்றிருக்கும் "ஞாயிறு-வணக்கம் " மற்றும் "வெண்ணிலா" என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் பாடலை காண்போம்.
ஞாயிறு - வணக்கம்
கடலின் மீது கதிர்களை வீசிக்
கடுகி வான்மிசை ஏறுதி யையா,
படரும் வானொலியின்பத்தைக் கண்டு
பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள்.
உடல் பரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொர் நுண்டுளியும்விழி யாகச்
சுடரு நின்றன் வடிவையுட் கொன்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே. 1
என்ற னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நின்று வாழ்ந்திடச் செய்குவை யையா,
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைத் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா! 2
காதல் கொண்டனை போலும்மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன். 3
வெண்ணிலா
[வெண்ணிலா என்பது இங்குச் சந்திரனுடைய பிரகாசத்தையன்று சந்திரனையே குறிப்பது]
எல்லை யில்லதோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே - விழிக்
கின்ப மளிப்பதோர் தீவின் நிலகுவை
வெண்ணிலாவே
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிலாவே - நின்றன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே.
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே(இந்த)
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே.
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
வெண்ணிலாவே - வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு
வெண்ணிலாவே. 1
மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
வெண்ணிலாவே - அஃது
வயதிற் கவலையின் நாவிற் கெடுவது
வெண்ணிலாவே.
காத லொருத்தி இளைய பிராயத்தள்
வெண்ணிலாவே - அந்தக்
காமன்நன் வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே.
மீதெழும் அன்பின் விளைபுன் னகையினள்
வெண்ணிலாவே - முத்தம்
வேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு
வெண்ணிலாவே.
சாதல் அழித அலாது நிரந்தரம்
வெண்ணிலாவே - நின்
தன்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்
வெண்ணிலாவே 2
நின்னொளியாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே - நன்கு
நீயும் அமுது அழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே.
மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன்
வெண்ணிலாவே - அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே.
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே - இங்கு
தோன்று முலகவே ளேயென்று கூறுவர்
வெண்ணிலாவே.
பன்னிய மேகச் சடையுமிசைக் கங்கையும்
வெண்ணிலாவே
பெட்புர நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலாவே. 3
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே - நினைக்
காதல்செய் வார்நெஞ்சிற் கின்னமு தாகுவை
வெண்ணிலாவே.
சீத மணிநெடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே - வண
தேசு மிகுந்தவெண் டாமரை போன்றனை
வெண்ணிலாவே
மோத வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலாவே - நீ
முத்தி னொளிதத் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே.
தீது புரித்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே - நலஞி
செய்தொளி நல்குவர் மேலவர் ராமன்றோ?
வெண்ணிலாவே. 4
மெல்லிய மேகத் திரைக்குள் மறந்திடும்
வெண்ணிலாவே - உன்றன
மேனி யழகு மிகைப்படக் காணுது
வெண்ணிலாவே.
நல்லிய லார்யவ வைத்தியர் மேனியை
வெண்ணிலாவே - மூடு
நற்றிரை மேனி நயமிக்க காட்டிடும்,
வெண்ணிலாவே.
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்
வெண்ணிலாவே - நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
வெண்ணிலாவே.
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே - இருள்
போகிடச் செய்து நினதொழில் காட்டுதி,
வெண்ணிலாவே. 5
Comments
Post a Comment